இரக்கம் பாராட்டுங்கள்

இரக்கம் பாராட்டுங்கள்

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். – (மத்தேயு 5:7).

இயேசுகிறிஸ்துவிடமிருந்து இரக்கத்தை பிரிக்க முடியாது. வியாதியஸ்தர்களை கண்டபோது மனதுருகி அவர்கள் மேல் கைகைள வைத்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். பாவத்தில், வியாதியில் மூழ்கி தவிப்போருக்கு கிறிஸ்துவை போல ஆறுதல் அளித்து, நம்பிக்கை கொடுத்து, தேற்ற வேண்டிய கடமை நமக்கும் உண்டு. இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள் (மத்தேயு 5:7) என்று இயேசுகிறிஸ்து கூறினார். கிறிஸ்து மற்றவர்கள் மனதுருகி இரக்கத்தை காண்பித்ததை போல நாமும் மற்றவர்களிடம் இரக்கத்தை காண்பிக்க வேண்டும். தேவன் அதில் பிரியப்படுவார். சில உண்மை சம்பவங்களில் கிறிஸ்துவின் இரக்கத்தை கிறிஸ்தவர்கள் எப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதை காண்போம்.

மேற்கு மிக்சிகன் மாநிலத்தில் பதினைந்து வயது சிறுவன் ஒருவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டான். கீமொதெரப்பி என்னும் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு தாங்கொண்ணா வேதனை, ஏனெனில் அவன் தலையிலிருந்த முடியெல்லாம் கொட்டி விட்டது. நோயின் முடிவு என்னவாகும் என்று அறியாத நிலையில் கிட்டத்தட்ட வழுக்கை தலையோடு பள்ளிக்கு சென்றால் வெட்கமாயிருக்குமே என்று தயங்கினான். ஆனால் பள்ளிக்கு திரும்பிய முதல் நாளில் வியப்பு அவனுக்கு காத்திருந்தது. அவனுடைய வகுப்பில் பலர் மொட்டையடித்து வந்திருந்தனர். அவன் மீது அன்பு கொண்ட சிறுவர்கள் புதிய முறையில் தங்களது இரக்கத்தை காட்டினர். நண்பர்களின் இச்செயல் அச்சிறுவனுடைய வேதனையை குறைத்தது.

ஒரு வேதாகம மாநாட்டில் செய்தி கொடுக்க வந்த ஜேக் வைர்ட்ஜன் என்பவர் மிகவும் வித்தியாசமான சரீர பாதிப்புடைய ஒருவருடன் உணவருந்த சென்றார். அந்நபர் வாயில் வைக்கும் உணவை மெல்ல முடியாமல் கொஞ்ச கொஞ்சமாக கீழே விழுந்து கொண்டே இருக்கும். ஆகவே தன் கழுத்தில் செய்தி தாளை கட்டி வைத்து கொண்டு சாப்பிடுவார். ஆகவே யாரும் அவர் அருகில் அமர்ந்து சாப்பிட விரும்ப மாட்டார்கள். இவ்வாறு தனித்து விடப்பட்ட அவருடன் ஜேக் உணவருந்தி ஆறுதல் அளித்தார். இது ஒரு தனி நபர் மீது இரக்கம் காட்டும் ஒரு செயலாகும்.

எலியட் என்பவர் காலைதோறும் வேதத்தை தியானிக்கும் பழக்கமுடையவர். அந்நேரத்தில் குப்பையை அகற்றும் நபரை பார்க்க நேரிட்டால், தனது தியானத்தை நிறுத்தி விட்டு, வெளியே சென்று, இன்முகத்தோடு அவரை விசாரித்து, உற்சாகப்படுத்துவார். அந்த குப்பை அகற்றும் தொழிலாளிக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி. இதுவும் இரக்கத்தின் விளைவுதானே! பால் என்பவர் ஹோட்டல் ஒனறிற்கு சென்றிருந்தபோது, அருகில் அமர்ந்திருந்த ஃபிரட்டி என்பவருக்கு நற்செய்தியை அறிவித்தார். அவர் விரைவிலேயே கிறிஸ்துவை ஏற்றுகொண்டார். சில காலம் கழித்து, ஃபிரட்டி புற்று நோயால் பாதிக்கப்பட்டவராக ஒரு சிறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பால் அவரை நாள்தோறும் சென்று சந்திப்பார். அவரது தேவைகள் அனைத்தையும் செய்து முடிப்பார். அவர் மரணமடையப்போகும் இரவில் அவரருகே வேத வசனங்களை கூறிக்கொண்டே இருந்தார். இதுவல்லவா இரக்கம் பாராட்டுதல்!

பிரியமானவர்களே இரக்கம் பாராட்டுதல் என்ற உடன் நீங்கள் வேறு ஏதோ பெரிய பெரிய காரியங்களை நினைத்து, ‘ஐயோ அப்படி செய்ய என்னிடம் அதிக பணமில்லையே’ என்று எண்ண வேண்டாம். சிறு சிறு காரியங்களை கரிசனையோடு செய்யுங்கள். அதுவே தேவனது பார்வையில் சிறந்தது. வீ ட்டிலேயே அடைபட்டு கிடக்கும் முதியவர்களோடு பேசி நலம் விசாரித்து அன்பு செலுத்துங்கள். நோய்வாய்ப்பட்டவர்களையும், விபத்தில் காயமடைந்தவர்களையும் சென்று பாருங்கள். யாருமே வாழ்த்தோ கடிதமோ போடாதவர்களுக்கு கடிதம் எழுதுங்கள். வேலையில்லாதவர்களுக்கும் மரணம் சந்தித்த வீடுகளுக்கும் செல்லும்போது உணவு சமைத்து கொண்டு செல்லுங்க்ள. உடல் ஊனமுற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், தனிமையில் வாடுபவர்களை நீங்களே சென்று நலம் விசாரித்து அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இவ்வித இரக்க செயல்கள் செய்ய பெரிய பணத்தொகை எதுவும தேவையில்லை. தேவனின் அன்பு இருதயத்தில் இருந்தாலே போதுமானது. மற்றவர்களிடம் இரக்கத்தை காட்டுவோமா? தகுதியல்லாத நமக்கு தேவன் இரக்கத்தை காட்டினாரல்லவா? கிறிஸ்துவின் இரக்கத்தை மற்றவர்களுக்கு காட்டுவோம். தேவன் அதில் மகிமைப்படுவார். ஆமென் அல்லேலூயா!

இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம் பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நீர் எங்கள் மேல் காட்டின இரக்கத்தை நாங்கள் மற்றவர்களுக்கும் வெளிப்படுத்த எங்களுக்கு உணர்த்தும். இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள் என்ற வசனத்தின்படி நாங்கள் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டி, அதினால் எங்களுக்கு இன்னும் அதிகமாய் உமது இரக்கம் கிடைக்கத்தக்கதாக மற்றவர்களுக்கு இரக்கத்தை வெளிப்படுத்த கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.