நற்கந்த வாசனை

நற்கந்த வாசனை 


இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். – (2 கொரி 2:15).

புத்தம் புதிய இந்நன்நாளில் தமது புத்தம் புதிய கிருபைகளை தருகின்ற புனிதராகிய இயேசுகிறிஸ்துவின் நல் நாமத்தில் வாழ்த்துக்கள். மே மாதம் ஆரம்பித்து விட்டது. கொடும் வேனிற் காலமும் ஆரம்பித்து விட்டது. கொடும் சூட்டிலிருந்து தப்பிக்க தேவன் நமக்கு கிருபை செய்வாராக. 

அது ஒரு பல மாடி கட்டிட அலுவலகத்தில் வேலை ஆரம்பிக்கும் நேரம். நேரமாகிவிட்டபடியால் அங்கு வேலை செய்ய வரும் மக்கள், வேகவேகமாய் வேர்த்துக் கொட்ட வந்து லிப்டில் ஏறுகிறார்கள். கூட்ட நெரிசலினால் ஒரு இறுக்கமான சூழ்நிலை. வேர்வை நாற்றம், இட நெருக்கடி. அப்போது ஒரு பெண் ஓடிவந்து ஏறுகிறாள். லிப்டை மூடும் நேரம், ஆனால் அவள் வந்தவுடன் புன்னகையுடன் லிப்டை நடத்துபவன் திறந்து வழிவிடுகிறான். இடமில்லாவிட்டாலும் அந்த பெண் முட்டி மோதி இடத்தைப் பிடித்து விடுகிறாள். அத்தனை நேரம் அமைதியின்றி நெரிசலில் நின்றிருந்த கூட்டத்தினர் மத்தியில் ஒரு அமைதி, அந்த இறுக்கம் நெகிழ ஆரம்பித்தது. ஏன் தெரியுமா? கடைசியாக ஏறின பெண் உற்சாகமாய் மற்றவர்களோடு பேச ஆரம்பித்தாள். தனது இனிய புன்முறுவலினால் மற்றவர்களை உற்சாகப்படுத்தினாள். அவளிடமிருந்து புறப்பட்ட அந்த வாசைன இறுக்கமாய் இருந்து மக்களிடையே ஒரு வித்தியாசத்தை உண்டு பண்ணினது.

பிரியமானவர்களே! இந்த கவலையான, நம்பிக்கையற்ற உலகத்தில் நாம் ஒரு நற்கந்தமாய் வாசைன வீச முடியும்.

யோவான் 12:3ல் “அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது “ எனப் பார்க்கிறோம். உங்கள் வீடு கிறிஸ்துவின் நறுமணத்தினால் நிறைந்திருக்கிறதா? உங்கள் வேலையிடங்களில் உங்கள் வரவு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? சோர்ந்து போயிருக்கிற மக்கள் மத்தியில் நல்மணம் வீசும் புது மலராக கிறிஸ்து உங்களுக்குள்ளிருந்து பரிமளிப்பாராக!

“சேற்றினின்றென்னை தூக்கியெடுத்து நல்மணம் வீசும் நல் மலராக்கினீர்.

உம் அன்பல்லவோ என்னை மாற்றினது.

” உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே

அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே

ஜெபம்:
எங்கள் அன்பின் பரம பிதாவே, என் வாழ்க்கை, சேற்றிலும், துர் வாழ்விலும் நாற்றம் வீசும் மக்கள் மத்தியில் ஒரு நல்மணம் வீசும் நறுமலராக வாசைன வீசட்டும். அதைக் கண்டு அநேகர் உம்மை அறிந்துக் கொள்வார்களாக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.