மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. – (சங்கீதம் 42:1).
. இந்த வசனத்தை நாம் அடிக்கடி படிததிருக்கிறோம். பாடலாய் பாடியிருக்கிறோம். ஆனால் அதன் அர்த்தத்தை நாம் தியானித்திருக்கிறோமா என்றால், மிகவும் குறைவானவர்களே அதை குறித்து தியானித்திருக்கிறோம். நாம் மான்கள் நீரோடையில் நீரை குடிப்பது போல ஓவியங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் நேரில் பார்த்திருப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே.
.
நாம் நாய் தண்ணீர் குடிப்பதை பார்த்திருக்கிறோம். எங்கள் வீட்டில் ஒரு நாயை வளர்த்தோம். அதற்கு தண்ணீர் தாகமாயிருக்கும்போது, நாக்கை வெளியே தொங்கவிட்டு, தண்ணீருக்காக அலையும். அது மூச்சு விடுவது வெளியே சத்தமாய் கேட்கும்.
.
அதை போலத்தான் இந்த மானானது தாகமாயிருக்கும்போது, நீரோடையின் அருகே ஒரு சிங்கம் தண்ணீர் குடித்து கொண்டிருப்பதை கூட பாராமல் தன் தாகத்தை தீர்த்து கொள்ள அங்கு ஓடி வருமாம். என் உயிர் போனாலும் பரவாயில்லை, என் தாகம் தீர வேண்டும் என்று எண்ணத்தோடு அங்கு நீரோடையை தேடி ஓடி வருமாம். வந்து ஆசையோடு அங்கு நீரை குடிக்குமாம்.
.
மேற்கண்ட வசனத்தில் சங்கீதக்காரன் சொல்கிறார், அவருடைய ஆத்துமா மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல கர்த்தரை வாஞ்சித்து கதறுகிறதாம். நான் என் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அது போல அத்தனை தாகத்தோடு நான் தேவனை தேடவில்லை என்பதே உண்மையாகும்.
.
நம்மில் அநேகர் அதுப்போலத்தான் இருக்கிறோம். கர்த்தருடைய வார்த்தையை நாம் எத்தனை தாகத்தோடு படிக்கிறோம்? ஏதோ கடமைக்கு படிக்க வேண்டுமே என்கிற எண்ணத்தோடு படிப்பவர்கள் எத்தனைபேர்? கர்த்தரை நோக்கி உம்மை நேசிக்கிறேன் ஆண்டவரே என்று உள்ளன்போடு, தாகத்தோடு அவருடைய சமுகத்தை நாடி தேடி சென்றிருக்கிறோமா? வேலைக்கு போகுமுன் சற்றுநேரம், ஜெபித்து விட்டு நம் வேலைக்கு சென்று விடுகிறோம். எத்தனை குறைவுள்ளவர்களாக நாம் காணப்படுகிறோம்?
.
கர்த்தருடைய சபைக்கு, ஆலயத்திற்கு, நம் தேவனுடைய வீடு என்கிற தாகத்தோடு செல்கிறோமா? போய் அங்கு அனைவரையும் காண வேண்டும், பேச வேண்டும் என்கிற எண்ணத்தோடு செல்கிறோமா? அல்லது தேவன் இந்த நாளில் எனக்கு என்ன சொல்ல போகிறார் என்கிற தாகத்தோடு அவருடைய வீட்டிற்கு செல்கிறோமா?
.
கர்த்தருக்காக நான் என்ன செய்ய போகிறேன் என்று தாகத்தோடு அவருக்கு ஏதாவது செய்ய துடிக்கிறோமா? அல்லது அதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள் நானும் போய் என்னத்தை செய்ய என்று சாக்கு போக்கு சொல்லி கொண்டு இருக்கிறோமா?
.
எவ்வளவாய் எல்லாவிதத்திலும் நாம் குறைவுபட்டு காணப்படுகிறோம்! இந்த வருடம் தொடங்கி இப்போது இன்னும் இரண்டு மாதங்களில் முடியவும் போகிறது. போன வருடத்தில் நாம் எப்படி இருந்தோமோ அப்படியே இந்த வருடமும் இருந்திருந்தால் என்ன பயன்? தேவனுக்குரிய காரியத்தில் நம்மில் எத்தனை பேர் தாகத்தோடு இருந்தோம்? தாகத்தோடு இருந்தவர்களும் அந்த தாகத்தை ஒருதடவை இரண்டு தடவை தீர்த்து கொண்டு, அப்படியே மங்கி போய் கொண்டிருக்கிறோமா? ஒரு தடவை நம்மை ஆராய்ந்து பார்ப்போம்.
.
நாம் அநேக உலக காரியங்களில் தாகமாய் இருக்கிறோம். வேலை செய்து அதன் சம்பளம் கிடைப்பதற்காக ஆவலாய் எதிர் நோக்கி காத்திருக்கிறோம். நம் பிள்ளைகள் நல்ல மார்க் எடுத்து, நல்ல காலேஜில் சேரும்படியாக, நம் பிள்ளைகளின் ரிசல்ட்டுக்காக ஆவலாய் காத்து கொண்டிருக்கிறோம். இதெல்லாம் தவறில்லை, ஆனால் கர்த்தருடைய காரியங்களில் நாம் இத்தனை தாகமும் ஆவலும் காட்டுகிறோமா என்றால் அதுதான் இல்லை!
.
இயேசுகிறிஸ்து அன்று சமாரிய ஸ்திரீயிடம் ‘நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது’ – (யோவான் 4:14)என்றவர், சிலுவையில் தொங்கி கொண்டிருந்த போது நான் தாகமாயிருக்கிறேன் என்றார். அவருடைய தாகம் தீருவது எப்போது? அவரை அறியாத அவரை தெரியாதபடி கோடி கோடியாய் ஜனம் அழிந்து கொண்டிருக்கிறதே, அவர்கள் கர்த்தரண்டை வரும்வரைக்கும் அவருடைய தாகம் தீராது. நமக்காக தமது சொந்த இரத்தத்தை சிந்தினவருடைய தாகத்தை தீர்ப்பது நமது கடமையல்லவா? அவருடைய தாகத்தை தீர்க்கும்படியாக நாம் தாகத்தோடு அவருக்காக உலகத்தை கலக்குகிறவர்களாக மாறுவோமா?
.
கர்த்தருக்காக நாம் தாகம் மட்டுமல்ல, அவர் நம்மை திருப்தியாக்குமட்டும் அவரையே பற்றி கொள்வோம். நம்முடைய தாகம் தீர்க்கும் ஜீவநதியான பரிசுத்தஆவியானவர் நம்முடைய தாகத்தை தீர்க்க அவரையே சார்ந்து கொள்வோம்.
.
கர்த்தருக்கடுத்த காரியங்களில் நாம் தாகம் கொள்ளவும், தாகம் தீர்க்கும் ஜீவநதியாகிய நம் தேவன் நம்முடைய தாகத்தை தீர்க்கவும் மீதமிருக்கிற இந்த வருடத்தின் இரண்டு மாதங்களிலும் வரும் காலங்களிலும் கர்த்தருக்காக காரியங்களை செய்ய தேவன் தாமே நம்மை வழிநடத்துவாராக! ஆமென் அல்லேலூயா!
.
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல
ஆத்துமா வாஞ்சிக்குதே
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கின்றேன்
|